ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வரும் பிரச்சினைகள் மீண்டும் வெளியில் வர ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட சூழ்ச்சியை போன்ற சூழ்ச்சியை மீண்டும் மேற்கொள்ள தயாராகி வருகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.

இதனிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ள வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் சீர்குலைந்துள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடும் அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். இரண்டு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகளை பொதுஜன பெரமுன மீறியுள்ளது.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், அமைச்சு பதவிகளை பகிர்ந்து கொள்வது ஆகியன தொடர்பில் சுதந்திரக் கட்சியினரை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டுள்ளனர். இதன் பின்னர் தேசிய மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை உள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளப்படாது ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த சில முறை முயற்சித்த போதிலும் அந்த பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்த முடியவில்லை. குறிப்பாக 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி இதுவரை எந்த பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.