கடந்த மார்ச் 31ம் திகதி முதல் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு கோரி 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதம் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அவர்களில் அமைச்சர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்து உதய கம்மன்பில உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது தொடர்பான விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவினால் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதோடு குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட சிலர் கொலை செய்யப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் என்பன சேதமாக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சொத்துகள் மற்றும் அரச சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களை தடுப்பதற்கு அப்போதைய காவல்துறை மற்றும் இராணுவ பிரதானிகளுக்கு முடியாமல் போனதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.