பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை, தராவீஹ் தொழுகை மற்றும் ரமழான் மாத அமல்கள் நிறுத்தப்பட்டமைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை குறை கூறாதீர்கள். விமர்சிக்காதீர்கள், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிருபத்தையே திணைக்களம் அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. நாட்டினதும் சமூகத்தினதும் பாதுகாப்பு கருதி கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.
ஆகக்கூடிய தொகையாக 25 பேரே பள்ளிவாசல் ஐவேளை தொழுகைகளில் கலந்துகொள்ள முடியும் என்பது பள்ளிவாசல்களில் மாத்திரமல்ல ஏனைய மதத்தவர்களுக்கும் இந்த எண்ணிக்கையானோரே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே கட்டுப்பாடுகள் பள்ளிவாசல்களுக்கு மாத்திரம் அல்ல என்பதில் நாம் தெளிவு பெற வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் தனிமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் கொவிட்19 வைரஸ் தொற்று தொடர்பான சுற்றுநிருபங்கள் வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சுக்கே அதிகாரமுள்ளது. எனக்கு அது தொடர்பில் சுற்று நிருபம் வெளியிட முடியாது. அவ்வாறான சுற்று நிருபங்களை அமுல்படுத்துவதே எனது கடமை.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பள்ளிவாசல்களுக்கென்று பிரத்தியேகமாக சுற்று நிருபங்கள் வெளியிடுவதில்லை. சுகாதார அமைச்சின் சுற்று நிருபங்கள் அனைத்து மதத்தலங்களையும் உள்ளடக்கியதாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல்களில் ரமழான் கஞ்சியை நிறுத்திவிட்டதாக சிலர் குறை கூறுகிறார்கள். விமர்சிக்கிறார்கள். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் சுற்று நிருபம் கஞ்சி கொடுக்க வேண்டாம் எனக்கூறவில்லை. பள்ளிவாசலுக்குள்ளே கஞ்சி விநியோகிப்பதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் விநியோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்று நிருபத்தை தவறாக விளங்கிக் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகள் சிலரே பள்ளிவாசல் வளாகத்தில் விநியோகிக்கப்படும் கஞ்சிக்கு தடை விதிக்கிறார்கள்.
பள்ளி வாசல்களை நாம் மூடச் சொல்லவில்லை. பள்ளிவாசல்களில் கூட்டமாக கூடாதீர்கள். சுகாதார வழிகாட்டல்களை தவறாது பின்பற்றுங்கள் என்றே கூறுகிறோம்.
எமது சமூகத்தில் ஒருசிலரே அரசாங்கத்தையும், திணைக்களத்தையும் இவ்விவகாரத்தில் விமர்சிக்கிறார்கள், பெரும்பாலானோர் ஒத்துழைக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் உணர்ச்சி மேலீட்டினாலே இவ்வாறு செயற்படுகிறார்கள். அவர்கள் மீது நாம் கோபப்படவில்லை என்றார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK