ரிஷாத் பதியுத்தீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டை சுத்தம் செய்யும் நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.

இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியமளிக்கும் வகையில் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விசேட கோரிக்கையை தனது சட்டத்தரணி ஊடாகவும் தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார்.

தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக்குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்துரைக்கப்பட்டபோதும் அதற்கு விருப்பம் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அந்த மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கும் அமைவாகவும் தனக்கு தமிழில் சாட்சியமளிக்க வசதிகளைச் செய்து தருமாறு கோரினார்.

இறுதியில் அதற்கான ஏற்பாடுகளை சில மணி நேரங்கள் சாட்சிப் பதிவை ஒத்தி வைத்து ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுத்தது.

எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியமளித்தமை ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சாட்சியம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் ஆஜராகினர்.

இதன்போது ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி ஜனக் டீ சில்வா பின்வருமாறு அறிவித்தார்.

‘ இதற்கு முன்னர், ரிஷாத் பதியுதீனின் சாட்சியத்தை ஸ்கைப் ஊடாக பதிவு செய்ய ஆணைக்குழு மறுத்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது அப்படி இல்லை. ரிஷாத் பதியுதீனுடன் தொடர்புபட்ட ஒருவர், ஆணைக் குழுவில் பதிவு செய்யப்படும் சாட்சியங்களை, வெளியே ஊடகங்களுக்கு செவிமடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து பதிவு செய்தமையை மையப்படுத்தி, ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகளின்போது அதனை ஸ்கைப் ஊடாக தொடர்புபட்டு அவதானிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையையே நிராகரிக்கப்பட்டது.

சாட்சியாளர் ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டின் இரு பக்கத்திலும் உள்ள கூண்டுகளில் இருந்து இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த சிறைக் கூண்டை சுத்தம் செய்யும் நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிறைச்சாலை அத்தியட்சகர் எமக்கு அறிவித்துள்ளார்.

எமது சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும். எனவே ரிஷாத் பதியுதீன் சாட்சியம் கண்டிப்பாக பெறப்பட வேண்டியது. எனவே ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். ‘ என அறிவித்தார்.

இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பின்வருமாறு கோரிக்கை முன்வைத்தார்.

‘ சாட்சியாளர் ரிஷாத் பதியுதீனுக்கு தமிழ் மொழியில் சாட்சியமயளிக்க ஒரு மொழி பெயர்ப்பாளர் அவசியம். அவர் இதனை ஆணைக்குழுவில் முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளார். சாட்சியமளிப்பதற்கான அறிவித்தல் இன்று காலை ( நேற்று) 9.00 மணிக்கே அவரது கைளுக்கு கிடைத்ததாக அவர் கூறினார். எனவே, அவருக்கு தமிழ் மொழியில் சாட்சியமளிக்க வசதிகளை செய்து தருமாரு கோருகின்றேன். ‘ என்றார்.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி ஜனக் டி சில்வா,

எமது ஆணைக்குழுவின் மொழி பெயர்ப்பாளர் சுகயீன விடுமுறையில் உள்ளார். ஜனாதிபதி செயலகத்திலிருந்து அவ்வப்போது நாம் அழைக்கும் மொழி பெயர்ப்பாளரும் விடுமுறையில் உள்ளார். எனவே மொழி பெயர்ப்பாளர் ஒருவரை உடனடியாக ஏற்பாடு செய்வதில் சிக்கல் உள்ளது.

சாட்சியாளர், சிங்களம், ஆங்கிலத்தில் சாட்சியமளிக்கலாம். ஏதேனும் விளங்காத சொற்கள் தொடர்பில் மீள அவர் வினவினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஆணைக்குழு தயார்.’ என அறிவித்தார்.

இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ‘ சிங்கள மொழியில் சாட்சியமளிப்பது தொடர்பில் எனக்குப் பிரச்சினை இல்லை. எனினும் சாட்சியாளர் தமிழ் மொழியில் சாட்சியமளிப்பதையே விரும்புகிறார் என தெரிவித்தார்.

இதனையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்கும்போதும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளிக்கும்போதும் சிங்கள மொழியில் அவற்றை வழங்கியதை சுட்டிக்காட்டினர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK