சுஐப் எம்.காசிம்-
கண்ணீருக்குள் அமிழ்ந்த பாயிஸ் K.A என்ற முதலெழுத்தின் பொருளை,
அவரது ஆத்மாவின் பிரியாவிடை நமக்கு
இப்படித்தான் புலப்படுத்தியிருக்கிறது. அடியோடு சாயும் விருட்சங்களின் அதிர்வுகளால், பூமி பதறுவது போல், பாயிஸின் நிரந்தர ஒய்வு, மானிடத்தின் மனத்தை பதற வைத்திருக்கிறது.
தரம் ஐந்து புலமைத் தேர்வில், மாவட்டத்தின் முதலாவது மாணவனாகி தலைகாட்டத் தொடங்கிய மர்ஹும் K.A.பாயிஸின் ஆளுமைகள், ஆத்மாவோடு அடங்கிச் சென்றுவிட்டதே!
புத்தளத்துக்கு இனிப் பொறுப்புதாரி யார்?இதுதான் இன்று ஏற்பட்டுள்ள பதற்றம். சமூக அடையாளங்கள் சாமரம் வீசுவதாலோ, மலர்களைத் தூவுவதாலோ வருவதுமில்லை, வளர்வதுமில்லை.
ஏழ்மை வியாபாரிக்குப் பிறந்த இந்தப் பாயிஸ், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்தும் ஆளுமைகள் எழும்ப முடியும் என்பதை நிருபித்துச் சென்றுவிட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் முகவரி தேடிய அரசியலில், இவர் காலடி வைத்ததிலிருந்து, அஷ்ரஃபின் விடுதலைப் பாதைகளும் பலமடையத் தொடங்கின. தனது விடுதலைப் பாதைகள் உறுதியாவதை உணர்ந்த அஷ்ரஃபின் ஆளுமையும், இந்த அடையாளத்தை காணத் தவறாதிருக்குமா? கட்சியின் மாவட்ட இளைஞர் அமைப்பாளரிலிருந்து ஆரம்பமான K.A பாயிஸின் பணிகள், அவரைப் பிரதியமைச்சர் வரைக்கும் உயர்த்தி, சமூகத்தின் முன் நிறுத்தியிருக்கிறது.
இவரது, சாதனைகள்தான் இனிச் சாமரங்களாக வீசப்போகின்றன. பட்டியலிட்டுச் சொல்லுமளவுக்கு சொற்பமில்லாத சேவைக்காரன் இவர். ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி, எவருக்குமெனத் திறந்து கிடக்கும் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை, களைப்புப் போக்குவதற்கான விளையாட்டரங்கு, கழிப்பறைப் பிரதேசமாக இருந்த கடல் பகுதியை களிப்படையும் காட்சித் திடலாக மாற்றியமை மட்டுமா, வடபுலத்து உறவுகளின் வலிகளை நீக்குவதில் இவருக்கிருந்த நாட்டம் இவற்றில் சிலதைப் பட்டியலிடலாம். இதனால் இப்போதும், இனியும் நமக்கு கிடைக்கும் பலாபலன்களை, இந்த பட்டியலுக்குள் பொத்தி வைக்க முடியாது. நமக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம் இதுதான் உறவுகளே!
வலிகளைச் சுமக்கும் வடபுல அகதிகளில் ஒருவனாக புத்தளம் வந்ததில், K.A.பாயிஸுடனும் எனக்குப் பழக்கமேற்பட்டது. 'அகதியுடன் என்ன உறவென்று' நினைக்காத மர்ஹும் K.A.பாயிஸின் மனநிலைகள் இருக்கிறதே!இடைவெளியில்லாமல் நமது சமூகப்பெருவெளியில் இனி மிதக்கப்போவது இவரது பெருமைகள்தான்.
ஊடகத்தின் ஒத்தாசையின்றி, சமூக விழிப்புக்களை விறுப்பூட்ட முடியாது என்பதில் மர்ஹும் K.A.பாயிஸிடம் இரு முடிவுகள் இருந்ததும் கிடையாது. எல்லோரது முடிவுகளும் ஏதிலியாகும் அந்த நாள் வரும்போது, நமது ஆத்மாக்கள் அவனிடம் செல்வதை, எவரது முடிவுகளால் தடுக்க முடியும்? "ஒவ்வொரு ஆத்மாக்களையும் அதனதன் தவணை வரும்வரை விட்டு வைத்திருக்கிறோம்". தவணை வந்ததால் எம்மைவிட்டுச் சென்ற எத்தனையோ ஆத்மாக்களில், இன்று K.A.பாயிஸின் ஆத்மாவும் சென்றுவிட்டது.
ஆண்டவன் சந்நிதானத்தில் K.A.B நிம்மதியாக தூங்க எமது பிரார்த்தனைகள் கண்ணீருக்குள் அமிழட்டும்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK