இலங்கை மீது பொருளாதாரத் தடை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடல் தொடர்பில் ஜெனீவா அழுத்தங்கள் ஆரம்பம்


ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா இயக்குனர் டீஜான் ஃபிஷர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும்.

தீர்மானத்திற்காக பிரச்சாரம் செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் பேரவை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46-1, எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் ஒரு புதிய புதிய பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுகிறது.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானமானது, உலகில் நீதி மறுக்கப்பட்டால், கொடுமைகளுக்கு பொறுப்புக்கூற ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் என்பதைக் காட்டுகிறது.

இலங்கையில் போரினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், பொறுப்புள்ளவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை குற்றங்களுக்கு நீதியை நெருக்கமாக கொண்டுவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானம் நிறைவேற்ற பின்னர் பகிரங்கமாக ஜெனீவாவிலிருந்து இவ்வாறானதொரு அழுத்தம் வந்துள்ள நிலையில், ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளும் இதனை பின்பற்றி தொடர்ந்து அழுத்தங்களை முன்வைக்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜெனிவாவிலிருந்து வந்துள்ள இந்த முதல் அழுத்தமானது தொடர்ச்சியாக, இலங்கை தொடர்பான இன்னும் பல அழுத்தங்கள் முன்வைக்கப்பட வழியேற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK