நாங்கள் கட்சி வரம்பை மீறவில்லை, மீறியிருந்தால் இந்நேரம் எங்களின் மீது கட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் : ஹரீஸ் எம்.பி.


நூருள் ஹுதா உமர்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்பது எமது கட்சியின் கொள்கை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரப் முதல் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் வரை ஏற்றுக்கொண்டுள்ளனர். கட்சி வரம்பை மீறியிருந்தால் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் அரவிந்தகுமாரை அவர்கள் நீக்கியது போன்று எங்களையும் மு.கா நீக்கியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்றால் நாங்கள் கட்சி வரம்பை மீறவில்லை என்பதை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 

இன்று (25) காலை கல்முனை மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஜி.கா.மு. அர்சத் கரியப்பர், சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்னி, பொதுசுகாதர பரிசோதகர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்த இவ்  ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நாட்டில் கொரோன வைரஸ் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பரவி வரும் நிலையில் இப்போது அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,மருதமுனை, பொத்துவில் ஆகிய இடங்களிலும் பலருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் தாக்கம் மக்களிடையே மேலும் அதிகரிக்காமல் தடுக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி மற்றும் இது தொடர்பிலான உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளேன்.  என்பதோடு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் கடந்த காலங்களில் எவ்வாறான மக்கள் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்ற விடையங்களை தாமதமின்றி வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை குறைக்க உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி எமது பிரேதசத்திலிருந்து இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எமது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை சுகம் விசாரிக்க செல்ல வேண்டாம் என்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு இன்று வந்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு ஒரு தந்திரோபாய புதிய அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தோம். அதே நேரம் இத்திருத்தச் சட்டம் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட இன்று பல்வேறுபட்ட திருத்தங்களோடு வந்து உள்ளது. குறிப்பாக அவசரகாலச் சட்டம், மற்றும் கணக்காய்வு சம்மந்தமான சுயாதீன குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு புதிய முன்னேற்றகரமான சில திருத்தங்களுடன் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்துள்ளோம்.

 20வது சீர்திருத்ததிற்கு எவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்ளுவது சம்மந்தமாக 20வது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட பின்பு கடந்த மாதம் உச்சபீட கூட்டம் நடைபெற்ற போது கூட நாங்கள் கலந்தாலோசித்து இருந்தோம். மீண்டும் உச்சபீடம் கூடி 20வது சீர்திருத்த சட்டமூலம் சம்மந்தமாக விவாதித்து இருந்தோம். நாடுபூராகவும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் உச்சபீடத்தில் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். அவர்களில் சிலர் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள் சிலர் இதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். ஈற்றிலே கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுவும் கூடி 20வது திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் புதிய திருத்தங்களும் வருகின்ற படியினால் அதை ஒப்பீடு செய்து கட்சியின் பாராளுமன்ற குழு அதனை தீர்மானிக்க முடியும். என்ற அங்கீகாரத்தினை கட்சியின் உச்சபீடம் கடந்த வாரம் வழங்கி இருந்தது. எனவே 20 வது திருத்த விவாதம் தொடங்கியதில் இருந்து புதிய திருத்தங்கள் என பல விடயங்களை ஒட்டி எங்களுடைய கட்சியின் தலைவர் தலைமையில் பல சுற்றுக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தோம்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரையில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியோ,கட்சியின் தலைவரின் கட்டளையை மீறியோ, நாங்கள் வாக்களிக்கவில்லை. இன்று முகநூல்கள் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைவரின் சொல்லை மீறி 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கமில்லாமல் கட்சியை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற பெரும் புரளியை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

பொதுவாக எமது கட்சியினுடைய வரலாற்றினை நோக்கும் போது எப்பொழுதும் மக்களுடைய நலனுக்காகவே செயற்பட்டு இருக்கின்றது வெளி நபர்கள் கூறுவது போன்று சந்தர்ப்பவாத அரசியலாகவோ,அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு அரசியல் செய்பவர்களாகவோ, அல்லது பதவிக்கு ஆசைப்பட்டு அரசியல் செய்யும் ஒரு கூட்டமாகவோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருந்ததில்லை. என்னைப் பொறுத்தமட்டில் இதயசுத்தியுடன் இறைவன் மீது ஆணையாக நாங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற 20 இலட்சம் முஸ்லிம்களின் எதிர்காலத்தை பற்றி கவலையோடு இருக்கின்றோம்.

 அதேநேரம் இந்த நாட்டில் ஆட்சியாளர்களாக வருகின்ற ஒரு சமூகம் சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஆகும். எனவே சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினுடைய அரசியல் நிலைப்பாட்டோடு அதிலுள்ள விடயங்களை மிகத் தீவிரமாக தந்திரோபாய ரீதியில் பார்க்க வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது.

அதிலும் நாங்கள் வாதிடலாம் முஸ்லீம்களும் எங்களுடைய சகோதர இனமான தமிழர்களும் நினைத்தால் கூட ஆட்சியை பிடிக்கவும் முடியாது ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரவே முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ இந்த நாட்டின் ஆட்சியை பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்கள் தான் ஆட்சியை அமைக்க முடியும். 

அதிலும் நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற அரசுக்கு ஒட்டுமொத்த சமூகமும் எதிராக இருக்கின்ற போது இந்த விடயம் ஒரு பாரதூரமான விரிசலை சிங்கள-முஸ்லிம் சமூகத்திற்கு இடையில் ஏற்படுத்தக்கூடும். என்கின்ற பயம் தெற்கில் உள்ள இளைஞர்கள், உலமாக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டித்தான் கடந்த பொதுத்தேர்தலில் வட கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகள் யார் என்று பாராமல் பொதுஜன பெரமுனக்கு வாக்களித்தனர்.

அதேநேரம் கிழக்கு மாகாணம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய முதுகெலும்பு என்பதோடு முஸ்லிம்களுடைய உள்ளூர் தேசிய அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக வருவதற்கு சாத்தியப்பாடுகள் உள்ள ஒரு அரசியல் பிராந்தியமும் ஆகும்.அங்கு அரசியல் சமநிலையில் முதல் நிலையில் உள்ள முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால் பாரிய பின்விளைவுகள் அந்த மாகாணத்தில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.எனவே இந்த கிழக்கு மாகாணத்தினுடைய அரசியல் சமநிலை என்பது ஒரு சமச்சீரற்ற நிலையில் இருப்பதனால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதனை நாங்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இருந்தோம். அதில் மிக பிரதானமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக உள்ள கல்முனை நகரினை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.அந்த நகரின் இறைமை அதிகாரத்தினை பாதுகாக்க வேண்டியது பொறுப்பு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. எனவே அந்த ஆட்சியாளர்களுடன் முட்டிமோதுகின்ற போதும், கடுமையான முறையில் உரசல்களை மேற்கொள்ளுகின்ற போதும் கல்முனையின் இறைமை என்பது கேள்விக்குறியாகும்.எனவே அதனை பாதுகாப்பது எங்கள் கடமையாகும்.  கல்முனையில் மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,  திருகோணமலை மாவட்டங்களின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் என்று பல விடயங்கள் காணப்பட்டன.

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் எங்கள் கட்சியின் தலைமைக்கு நாங்கள் தெளிவாக சொன்னோம். இலங்கை வரலாற்றில் புதியதொரு அரசியல் கலாசார சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் தேசியத்தின் அரசியலில் புதிய தந்திரோபாய அரசியல் காய்நகர்த்தல்களை கடைப்பிடிக்கின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியம் என்ற ரீதியில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசுக்கு  வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள். அதனால்தான் வியாழேந்திரன், பிள்ளையான் கருணா போன்றவர்கள் அரசின் முக்கிய சக்திகளாக மாறியுள்ளார்கள்.

இவ்வாறான நியாயபூர்வமான காரணங்களை எங்கள் தலைமைக்கு எடுத்துக்கூறிய போது கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் ஆதரவாகவும் வாக்களிக்கலாம், எதிராகவும் வாக்களிக்கலாம். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அந்த உரிமையை தருகின்றேன் இதில் ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு கட்சியினதோ, தலைவரினதோ கட்டுப்பாட்டை மீறியதாக கருதப்படமாட்டாது. என்ற தலைமையின் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே நாங்கள் 20வது சீர்திருத்தத்திற்கு வாக்காளித்தோம்.என குறிப்பிட்டார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK