இலங்கையின் மூத்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் நடேஷ சர்மாவின் மறைவு கவலை தருகிறது.  இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 1971 ஆம் ஆண்டில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட சர்மா பின்னர் முதல்நிலை (Super Grade)  அறிவிப்பாளராகவும் கட்டுப்பாட்டாளராகவும் உயர்வு பெற்றார். செய்தி வாசிப்பாளராக இலங்கை வானொலியிலும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திலும் கடமையாற்றினார். சமய நிகழ்வுகளுக்கான சிறந்த நேர்முக வர்ணனையாளராவும் அவர் தன் பணியை முன்னெடுத்தார்.

அனைத்திற்கும் மேலாக ஒரு சிறந்த நிருவாகியாகவும் நேர்மையான அதிகாரியாவும் உயரிய நட்புக் கொண்ட நல்ல மனிதராகவும் வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது மறைவில் துயர் கொள்ளும் குடும்பத்தினருடன் இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியமும் இணைந்து கொள்வதாக ஒன்றியத்தின் தலைவர் யூ எல் யாக்கூப் விடுத்திருக்கும் அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.