கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான சட்ட மூலத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டது
17 பேர் வாக்களிக்கவில்லை
இவ்வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்ட 17 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக றிசாத் வாக்களிப்பு, ரதன தேரர், இசாக், அலிசப்ரி ரஹீம் ஆதரவாக வாக்களிப்பு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் மீதான விவாதம் இரு நாட்களாக (18 -20) இடம்பெற்றது.
நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்தார்.
இரு நாள் விவாதம்
இச்சட்ட மூலம் தொடர்பில், சீனாவின் காலணியாக இலங்கை மாறப் போகின்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்த நிலையில், இதன் மூலம் நாட்டிற்கு பல்வேறு வழிகளிலும் நன்மைகள் கிடைக்குமென ஆளும்தரப்பு எம்.பிக்கள் வாதங்களை முன்வைத்திருந்தனர்
அதற்கமைய, இரு நாள் விவாதத்தை தொடர்ந்து இன்று (20) பிற்பகல் விவாதம் நிறைவடைந்தது.
வாக்கெடுப்பு
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் பகிரங்க வாக்கெடுப்பை கோருவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்ட மூலம் மீதான பகிரங்க வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது.
அதற்கமைய சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் பதிவாகின.
அதற்கமைய, 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம்
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
காலி முகத்திடலிலிருந்து கடலில் 233 ஹெக்டயர் பரப்பை நிரப்பி உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கான சீனாவின் முதலீடு சுமார் 15 பில்லியன் டொலர்களாகும் (சுமார் ரூ. 3,000 பில்லியன்)
ஆணைக்குழு
இத்திட்டத்தின் பல்வேறு தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு எனும் ஆணைக்குழுவொன்றை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அதற்கான சட்ட மூலமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றில் மனு
ஆயினும் குறித்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளால் உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அது தொடர்பிலான உச்ச மன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது.
அரசியலமைப்புக்கு முரண்
அதன் அடிப்படையில் குறித்த சட்ட மூலத்திலுள்ள ஒரு சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணனாது என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், அதனை மாற்றியமைப்பதன் மூலம் பாராளுமன்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியது.
நிறைவேற்றம்
அதன் பின்னர், குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு விவாதத்திற்குட்படுத்தப்பட்டு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK