பாடசாலைகளில் இனிமேல் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்




மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களில் கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நவம்பர் 09 ஆம் திகதி திட்டமிட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிப்பதை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்தது.

அதாவது, நவம்பர் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டது. தற்போது தீர்மானிக்க நடைமுறையில் இது சாத்தியமா? இதனை செய்ய முடியுமா? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் எமது மாணவர் சமூகத்தின் சுகாதார பாதுகாப்பு, எதிர்காலம் குறித்த விடயங்களின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வோம்.

இந்த 2 விடயங்களையும் கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயல்படுகின்றது. இருப்பினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானங்கள் தொடர்பில் பெற்றோருக்கும் , பழைய மாணவர்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.

நவம்பர் 23 ஆம் திகதி மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளை நாம் திறக்க போவதில்லை. அதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது.

அதேபோன்று இந்த 3 மாவட்டங்களிலும் உள்ள மாணவ, மாணவிகள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாது. அதேபோன்று ஏனைய மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகளும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வரமுடியாது. இதற்கான காரணம் தற்போது உள்ள நிலைமையாகும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் வேறு தனியான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களில் கல்வி நடவடிக்கைகளை 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியும்.

இது தொடர்பில் தீர்மானத்தை கல்வி அமைச்சு இசுருபாயவில் இருந்து மேற்கொள்ள முடியாது. இதற்கு காரணம் அந்தந்த பாடசாலைகள் உள்ள பிரதேசங்களின் நிலைமை மாறுபடுவதேயாகும்.

தரம் 6 தொடக்கம் 11 வரையில் வகுப்புக்கள் நடத்தப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை 6,257 ஆகும். தரம் 6 தொடக்கம் 11 வரை வகுப்புக்களில் 15 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் 28.6% ஆகும். இந்த வகுப்புக்களில் 16 தொடக்கம் 30 வரையிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் 43.6% ஆகும்.

தரம் 11 தொடக்கம் 13 வரையிலான உயர்தர தரங்களில் வகுப்புக்கள் நடத்தப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை 2,898 ஆகும். இந்த பாடசாலைகளில் வகுப்பில் 15 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் 53.4% ஆகும். இந்த தரங்களில் 16 தொடக்கம் 30 வரையிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் 36.7% ஆகும். இதன் மூலம் இந்த முரண்பாடுகள் தெரிகின்றன.

இதன் காரணமாக இந்த பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பை அந்தந்த பாடசாலை அதிபர்கள் தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த குழுவில் பிரதேச சுகாதார அதிகாரி, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதி, பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதி ஆகியோர் அடங்கியிருப்பர். இந்த குழுவே பாடசாலை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும். இந்த குழுவினர் பாடசாலைகளில் வகுப்புக்களை நடத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்வர்.

இந்த தீர்மானம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொறுப்பை நாம் வலய கல்வி பிரிவுக்கு வழங்கியுள்ளோம். 98 வலய கல்வி பணிப்பாளர்கள் இருக்கின்றனர். இந்த பணிப்பாளர்களுக்கும் முழுமையான பொறுப்பு உண்டு. இந்த பாடசாலைகளில் உள்ள குழுக்கள் மேற்கொள்ளும் தீர்மானம் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொறுப்புக்கள் இவர்களுக்கும் உண்டு.

இந்த பகுதிகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையிலான மாணவர்கள் உள்ள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட மாட்டாது. இந்த வகுப்புக்களில் வயது குறைந்த மாணவர்கள் உள்ளனர். அதாவது 6 தொடக்கம் 10 வயதானவர்கள் மத்தியில் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார விடயங்களை நடைமுறையில் மேற்கொள்வது சாத்தியப்படாது. அதனால் தரம் 1 தொடக்கம் 5 வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படமாட்டாது.

23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த வேலைத்திட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதேபோன்று 23 ஆம் திகதி பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பிலும் நாம் ஆராய்ந்து பின்னர் அறிவிப்போம். இதேபோன்று கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான விபரங்களை கொண்ட சுட்டறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு இன்று வெளியிட எதிர்பார்த்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK