முறையாகத் திட்டமிடப்பட்ட பொருளாதார முறைமையின் மூலமே நமது நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யமுடியும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்


 பொருளாதார முறைமை மாற்றம் என்பது ஆரோக்கியமான விடயந்தான் ஆனால் அது

முறைப்படுத்தப்பட்ட, சரியாக திட்டமிடப்பட்ட ஒரு முறைமையில் இருந்து கொண்டு வரப்பட

வேண்டுமென்பது எனது வேண்டுகோளாக இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர்

சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் கட்டுப்பாட்டுச்

சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு

உரையாற்றும்போதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அத்தியவசியமற்ற பொருட்கள் தொடர்பான இறக்குமதித் தடை என்பது எமது நாட்டின்

பொருளாதாரத்தில் எந்தவிதமான பாதிப்பை அல்லது நன்மையைக் கொண்டுதரும் என்பதை

அறிந்து கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. அரசாங்கம் இதை எப்படி சரியாகக்

கண்டுகொண்டு செல்லப்போகிறது என்பது தொடர்பான தெளிவு எங்களுக்கு

கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது நாட்டில் 1970 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை மூடு பொருளாதாரமே

காணப்பட்டது. சிரிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமராக இருந்த காலத்தில், இந்த

மூடு பொருளாரத்தின் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கான ஒரு

திட்டத்தை வகுத்தார்.

உற்பத்தி பொருளாதாரம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்

என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதில் ஒரு

தவறும் இருக்க முடியாது. ஆனால் சரிவர ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முறைமையின் ஊடாக

அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதா என்பதில் இருந்ததுதான் கேள்விகள் தொடங்கின்றன

என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு

உள்ளானார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை, உள்ளூர் உற்பத்திகள் மூலமாகக்

கண்டடைய முடியும் என்றிருந்த நம்பிக்கை வீணாகி, அத்தியாவசிய பொருட்களுக்காக,

வரிசையில் நின்று கொண்டிருக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டது.

அதுதான் நாம் கண்ட வரலாறு.

1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினர், திறந்த பொருளாதார

முறைமையை இந்த நாட்டில் அமல்படுத்தியிருந்தார்கள். 17 ஆண்டுகளின் பின்னர் ஶ்ரீலங்கா

சுதந்திரக் கட்சி சார்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க - ஜனாதிபதியாக


வந்தபோது, அவருடைய தாய் கொண்டு வந்த மூடு பொருளாதார முறைமை மீண்டும்

நடைமுறைக்கு கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் இந்த திறந்த

பொருளாதார முறைமையையே தொடர்ச்சியாக நடைமுறையில் நிறுத்தினார்.

77 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நம் நாட்டில் திறந்த பொருளாதார முறைமையே

நடைமுறையில் இருக்கிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி 1977 இலிருந்து இன்று

வரையிலும் திறந்த பொருளாதாரக் கொள்கை கொண்ட ஒரு நாடாகவே இலங்கை

மிளிர்கின்றது. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், தென்னாசியப் பிராந்தியத்திலே

முதன்முறையாக திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்த ஒரு தேசமாக

இலங்கை இருக்கின்றது.

எமக்குப் பின்பு இந்த நவ தாராளவாதக் கோட்பாட்டைப் பொருளாதாரக் கொள்கையாகக்

கொண்டுவந்த சிங்கப்பூர், தாய்லாந்து, ஹொங்கொங் அதேபோன்று, தென்கொரியா போன்ற

நாடுகள் முன்னேறியிருக்கின்ற அளவுக்கு, தென்னாசியப் பிராந்தியத்திலே முதலாவதாக

இக்கொள்கையைக் கொண்டுவந்த நாடான இலங்கை முன்னேறவில்லையென்பது மிகவும்

கவலைப்படக்கூடிய ஒரு விடயமாகும்.

இத்தகையதொரு சூழ்நிலையில்தான், தற்போது ஆட்சிபீடமேறியிருக்கின்ற ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷ இறக்குமதிப் பொருட்களுக்கான தடையை விதித்திருக்கின்றார்.

இதனை எப்படிப் பார்ப்பது? இலங்கையிலே புதியதொரு பொருளாதாரக் கொள்கை

வகுப்பாக்கம் நடைபெற்றிருப்பதாகப் பார்ப்பதா? அல்லது 1929 ஆம் ஆண்டு உலகிலேயே

பாரியதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகள்

தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிகளைத் தடை செய்தன. அவ்வாறானதொரு

சூழல் இலங்கையில் தற்போது நிலவுகின்றது.

”கொவிட் 19” அதேபோன்று, ஏப்ரல் 21 தாக்குதல் போன்ற காரணங்களினால்

ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரப் பின்னடைவைச் சரிசெய்வதற்காகக் கொண்டு

வரப்பட்டிருக்கின்ற ஒரு விடயமாக இந்த இறக்குமதித் தடையைப் பார்ப்பதா? அல்லது

நிரந்தரமாக ஒரு பொருளாதார முறைமை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா?

எப்படியிருந்தாலும், இந்த நாட்டிலே 2009 வரை இடம்பெற்ற யுத்தத்தினால்

பாதிக்கப்பட்டிருந்தமையால்தான் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மூலம் எம்மால்

பயனை அடைய முடியவில்லை என்றொரு வாதம் சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

அப்படியானால், 2009 - 2020 வரையிலான காலப்பகுதியிலே இந்தத் திறந்த பொருளாதாரக்

கொள்கையின்மூலம் நாம் எதனை அடைந்தோம் என்பது மிக முக்கியமானதொரு

கேள்வியாகவிருக்கின்றது" என்ற கேள்வியையும் அவர் தொடுத்தார்.

இறக்குமதி தடைவிதிப்பின் மூலமாக, மாபியாக்களின் தோற்றங்களுக்கு

வழிசமைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

"எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுடைய

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவேண்டுமென்ற நோக்கத்தில் இந்த இறக்குமதித் தடை

கொண்டுவரப்பட்டிருந்தால் அது உண்மையில் நன்மை பயக்கக்கூடியதாகவிருக்கும் என்பதில்

மாற்றுக்கருத்து இல்லை. உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு இதனால் நன்மை


கிடைக்கின்றது என்பதைவிட, இதுவேறொரு வகையான மாபியா இந்த இலங்கையில்

உருவாவதற்கான ஒரு தோற்றத்தைக் காண்பிக்கின்றது என்பதை நான் இங்கு

சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

மஞ்சள் பற்றி இங்கு பலர் பேசினார்கள். இலங்கையிலே வெறுமனே 5000 விவசாயிகள்தான்

மஞ்சளை உற்பத்தி செய்கின்றார்கள். அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்கச்

செய்வதற்காக மஞ்சள் மீதான தடை கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்று

எடுத்துக்கொண்டால் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் அதனை நுகர்பவர்களாக

இருப்பதையும் அவதானிக்க வேண்டும். இன்று 2000 மெட்ரிக் தொன் அளவுதான்

இலங்கையிலே மஞ்சள் உற்பத்தி காணப்படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தளவிலே

கிட்டத்தட்ட 5000 மெட்ரிக் தொன் மஞ்சள் உற்பத்தி தேவைப்படுகின்றது.

இத்தகையதொரு சூழ்நிலையில் மஞ்சள் மீதான தடைவிதிப்பானது விவசாயிகளை

ஊக்குவித்திருக்கின்றதா? அல்லது கஞ்சா மாபியா, மணல் மாபியா, அரிசி மாபியா

என்பதுபோல மஞ்சள் மாபியாவும் இந்த நாட்டிலே உருவாகுவதற்கு இதுஇடம்

கொடுத்திருக்கின்றதா? என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது.

முறையாகத் திட்டமிடப்பட்ட பொருளாதார முறைமையின் அமுலாக்கத்திலேயே எமது

நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யமுடியும் என்ற விடயத்தையும் வலியுறுத்திப்

பேசினார்.

"பொருளாதார முறைமையில் மாற்றம் வருமாக இருந்தால், அதனை நாம் ஆரோக்கியமாகச்

சந்திப்பதற்குப் பல விடயங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக அரசு கவனம் செலுத்தியதாக

ஆளும் தரப்பிலிருந்து யாரும் பேசியதாகத் தெரியவில்லை. Single Window Clearance System

எனப்படும் ஒற்றைச் சாளர முறைமை பற்றி இங்கு பேசினார்கள்.

ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் இந்த நாட்டுக்குள் தொழில் முயற்சியொன்றைத்

தொடங்குவதற்குப் பல மார்க்கங்களைக் கடக்க வேண்டும்;. பலரது அனுமதிகளைப்

பெறவேண்டும். இத்தகைய சிக்கல்களைப் போக்க வேண்டுமானால், ஒற்றைச் சாளர

முறைமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்டன. ஆனால், அது

தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் செய்வதாக இல்லை.

வெளிநாட்டு முதலீடுகளை இந்த நாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய தேவைப்பாடும்

இருக்கின்றது.

எமது நாட்டுக்கு அண்மையில் இருக்கின்ற இந்திய நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசவேண்டிய

நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். ஐரோப்பிய ஒன்றிய நாடான லக்ஸம்பேர்க்கின்

பரப்பளவினைவிட இரண்டு மடங்கு பரப்பளவைக்கொண்ட பெரும் நிலப்பரப்பை

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஒதுக்குவதற்கு இந்தியா இப்பொழுது

தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவுக்குச் செல்லாமல்

இலங்கையிலேயே முதலீடுகளைச் செய்வதற்கு என்னென்ன விடயங்களை நாம்

வைத்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு தெளிவு இந்த நாட்டிலே நமக்குத்

தேவைப்படுகின்றது.


நாம் இந்தியாவிலிருந்து பல்வேறுப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றையும் இறக்குமதி செய்கின்றோம்.

இந்தியாவினுடைய முச்சக்கர வண்டிக்கான சந்தையானது இரண்டாவது பெரிய சந்தையாக

இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களையாவது ஏற்றுமதி

செய்வதற்கான தொழில்நுட்ப முறைமைசார் வேலைத்திட்டமொன்றை இங்கே உருவாக்குவது

பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

எந்த முறைமையினூடாக இவற்றை முன்கொண்டு செல்லலாம் என்பது பற்றிய தெளிவை

எதிர்வரும் நாட்களில் ஏற்படுத்தவேண்டியது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுடைய

பொறுப்பு என்பதையும் இங்கே வலியுறுத்துகின்றேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK